மும்பையில் அசோக் சவானுடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.சி. அமர் ராஜுர்கரும் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி வருவது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலத்தில் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். அந்தவகையில், கடந்த மாதம் முரளி தியோரா மகன் மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர்ந்தார். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சராக இருந்த பாபா சித்திக்கும் விலகினார். இதையடுத்து மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர், போகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகினார். இதனைதொடர்ந்து தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் ராகுல் நர்வேகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்துள்ளார். இந்நிலையில், மும்பையில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்த அசோக் சவான் பா.ஜ.க.வுடன் தன்னை இணைத்து கொண்டார். மேலும் இவருடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.சி. அமர் ராஜூர்கரும் பா.ஜ.க.வில் இணைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!