கொரோனா தொற்றுக் காலத்தில் பயணிகள் ரயிலில் குறைந்தபட்ச ரயில் கட்டணம் 10 ரூபாயாக இருந்தது. அதன் பின்னர் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் குறைந்தபட்ச இருக்கை போன்ற காரணத்தினால் டிக்கெட் விலை அதிகரித்தது. அதன்படி சாதரண கட்டணம் 20 சதவிகிதம் அதிகரித்து 30 ரூபாயாக உயர்த்தப்பட்டது. கட்டண உயர்வால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து, கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என பயணிகள் ரயில்வே நிர்வாகத்திடம் நீண்ட நாட்களாகவே வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தினசரி பயணிகளுக்கான குறைந்தபட்ச ரயில் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காக ரயில்வே வாரியம் குறைத்துள்ளது. இந்த கட்டணம் அதி விரைவு ரயில்களுக்கு பொருந்தாது. கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் அதனை 10 ரூபாயாகக் குறைத்து பெரும் நிவாரணம் அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இந்த கட்டணம் குறைப்பை மத்திய அரசு செய்துள்ளதாகவும் பயணிகள் தெரிவித்து வருகின்றனர். நேற்று முதலே இந்த பயணக் கட்டணக் குறைப்பு அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.