திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெறுகிறது. இன்று நடைபெறும் மாநாட்டு திடலுக்கு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்றடைந்தார். முதலமைச்சரை வரவேற்கும் விதமாக மாநாட்டு திடல் பகுதியில் கம்போடியா கலைஞர்களின் நடனம், கேரள செண்டை மேளம், கதகளி, மயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். இந்நிலையில், இன்று திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஏராளமான திமுக தொண்டர்கள் காலை முதலே மாநாட்டு திடலுக்கு வருகை தந்துள்ளனர். திருவள்ளூரில் இருந்து பெத்தநாயக்கன்பாளையத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்ட நிலையில், அதில் ஏராளமான தொண்டர்கள் வந்துள்ளனர். சேலத்தில் திமுக இளைஞரணி மாநாட்டையொட்டி 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.