குடியரசு தின விழாவையொட்டி சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தினம் நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் கூடும் இடங்கள் அனைத்திலும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரெயில் நிலையங்களில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள். சென்னை மாநகர் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் 2 வாரங்களுக்கு முன்பு இருந்தே போலீசார் கண்காணித்து வருகிறார்கள். கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பஸ் நிலையம் பகுதிகளிலும் போலீசார் சோதனை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். தங்கும் விடுதிகள், லாட்ஜுகளில் இரவு நேரங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேக நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!